பாபநாசம் அருகே பெண்ணை கற்பழித்து நகைகள் கொள்ளை 4 பேர் கைது


பாபநாசம் அருகே பெண்ணை கற்பழித்து நகைகள் கொள்ளை 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 10:15 PM GMT (Updated: 10 Jan 2019 7:27 PM GMT)

பாபநாசம் அருகே பெண்ணை கற்பழித்து நகைகள்-செல்போனை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி தேவி(வயது 38).(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். தற்போது ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராஜா வெளிநாடு செல்வதற்கு முன்பு இங்கு ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அதே பஸ்சில் கோபுராஜபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(32), டிரைவராக வேலை பார்த்து வந்தார். ராஜா வெளிநாடு சென்றதும் அவரது மனைவி தேவிக்கும், வெங்கடேசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அப்போது வெங்கடேசன், தேவியிடம் இருந்து பணம் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவி, பாபநாசத்தில் வெங்கடேசனை சந்தித்து தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அதற்கு வெங்கடேசன், தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் அவர் தேவியுடன் உல்லாசமாக இருக்க அவரை அருகே உள்ள ஒரு தோப்புக்கு அழைத்து சென்றார்.

முன்னதாக அவர் அந்த தோப்புக்கு தனது நண்பர்களான கோட்டச்சேரி பகுதியை சேர்ந்த அய்யப்பன்(18), கார்த்திக்(20), மற்றும் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகன்(19) ஆகிய 3 பேரையும் வரவழைத்திருந்தார்.

அந்த தோப்புக்கு வெங்கடேசனும், தேவியும் சென்றதும் அங்கு மறைந்து இருந்த அய்யப்பன், கார்த்திக், ஜெகன் மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தேவியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் செல்போனை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வெங்கடேசன், அய்யப்பன், கார்த்திக், ஜெகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தேவியை கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த தேவி தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தோப்பில் இருந்து வெளியே வந்து பாபநாசம் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கோபுராஜபுரம் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்ற வெங்கடேசன், அய்யப்பன், கார்த்தி, ஜெகன் ஆகிய 4 பேரையும் கைது செய்து 5 பவுன் நகைகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு ராஜசேகர், 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

Next Story