தஞ்சையில் ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு வேலைக்கார பெண் கைது


தஞ்சையில் ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு வேலைக்கார பெண் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 10:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:33 PM GMT)

தஞ்சையில் ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவவ்கல்லூரி சாலையில் உள்ள எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது65). இவர் தஞ்சையில் ஜெராக்ஸ்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் தஞ்சை கூட்டுறவு காலனி அருளானந்தபுரத்தை சேர்ந்த கணேசன் மனைவி பழனியம்மாள் (27) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று பழனியப்பன் வீட்டை பூட்டி விட்டு கடைவீதிக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் பிரிட்ஜ் மீது ஒரு பையில் போட்டு வைத்திருந்த 18½ பவுன் நகையை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்படவில்லை. காலையில் வீட்டிற்கு வேலைக்கார பெண் மட்டும் வந்து வேலை செய்து விட்டு சென்றது தெரிய வந்தது. ஆனால் வீட்டில் இருந்த நகையை மட்டும் காணாததால் வேலைக்கார பெண் மீது சந்தேகம் அடைந்தார்.

இது குறித்து பழனியப்பன் தஞ்சை தெற்கு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர்.

Next Story