காளைகளுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் ஜல்லிக்கட்டு நடத்த தடை


காளைகளுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் ஜல்லிக்கட்டு நடத்த தடை
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:38 PM GMT)

காளைகளுக்கு ஊக்கமருந்து கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக தடை விதிக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழனி, 

பழனியை அடுத்த நெய்க் காரப்பட்டியில் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி சப்-கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார்.

தாசில்தார் சரவணக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்காக என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வாடிவாசலுக்கு காளைகளை கொண்டு செல்லும் வழி மற்றும் வெளியேறும் வழி ஆகியவை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும். பார்வையாளர்களின் இருக்கைகள் மற்றும் மேற்கூரை எவ்வாறு அமைப்பது குறித்து சப்-கலெக்டர் முன்னிலையில் விவாதம் நடந்தது.

அதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் ஜல்லிக்கட்டு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார். அதாவது, ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து காளைகளையும் வாடிவாசல் பகுதிக்கு கொண்டுவர வேண்டும். முன்னதாக காளைகளுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

காளைகளுக்கு எந்தவித ஊக்கமருந்தும் கொடுக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வாடிவாசலுக்கு அனுப்பப்படும். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளையின் திமிழை பிடிக்கும் வீரர் அது 3 முறை குதித்த பிறகும் விடவில்லை என்றால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

அதேபோல் வீரர் பிடித்ததும் காளை குதிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடினால், 15 மீட்டர் தூரம் வரை அந்த காளையை அவர் விடவில்லை என்றால் அவரே வெற்றியாளர். ஒருவேளை காளை ஓடாமல் நின்றால் 30 வினாடிகள் அந்த காளையை பிடிக்கும் வீரரே வெற்றியாளர் ஆவார் என் றார். அதையடுத்து சப்- கலெக்டர் கூறுகையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்கமருந்தோ அல்லது அவற்றுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் மருந்துகளோ கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் தேங்காய் நார்கள் பரப்பியிருக்க வேண்டும். காளைகளை அடக்கும் வீரர் கள் மது, போதை வஸ்துகளை உபயோகிக்க கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அந்த வீரர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றார்.

Next Story