பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியாது கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியக்குழு தலைவர் அறிவிப்பு


பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியாது கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியக்குழு தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:49 PM GMT)

போதிய தண்ணீர் இல்லாததால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியக்குழு தலைவர் ஆர்.கே. ஜெயின் தெரிவித்துள்ளார்.

செங்குன்றம்,

புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீீர், மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை உள்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற பயன்படுகிறது.

மேலும் தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை பூண்டியில் சேமித்து வைத்து சென்னை வாழ் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம்

கோடை வெயில் மற்றும் பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. அதே போல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்தது. தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் 30 நாட்கள்தான் குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி வலியுறுத்த தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் முரளிதரன், பக்தவத்சலம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஐதராபாத் சென்றனர். அங்கு கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியக்குழு தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தண்ணீர் திறந்து விட முடியாது

இதற்கு பதில் அளித்து ஆர்.கே.ஜெயின் பேசியதாவது:-

பருவ மழையால் 50 டி.எம்.சி. தண்ணீர் ஆண்டு தோறும் ஸ்ரீசைலம், சோமசிலா அணைகளில் இருந்து கண்டலேறு அணைக்கு வந்து சேரும். பருவமழை பொய்த்து போனதால் 2018-ம் ஆண்டு கண்டலேறு அணைக்கு 16 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைத்துள்ளது. தற்போது கண்டலேறு அணையில் 7.50 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் இருப்பில் உள்ளது. இது ஆந்திராவில் உள்ள விவசாயிகள் மட்டும் குடிநீருக்காக எப்போதும் சேமித்து வைப்போம்.

ஆகையால் தற்போதைக்கு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது. மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் மார்ச் மாதத்தில் தண்ணீர் திறப்புக்கு பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து தமிழக அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.

Next Story