ரஜினியின் `பேட்ட' படம் வெளியீடு தியேட்டர் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்


ரஜினியின் `பேட்ட படம் வெளியீடு தியேட்டர் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2019 11:15 PM GMT (Updated: 10 Jan 2019 10:23 PM GMT)

மும்பையில் ரஜினியின் ‘பேட்ட' திரைப்படம் நேற்று வெளியானது. இதில், ரசிகர்கள் சிறப்பு காட்சியை பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

மும்பை, 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட' திரைப்படம் நேற்று வெளியானது. மும்பையில் சயான் பி.வி.ஆர். திரையரங்கில் ‘பேட்ட' திரைப்படத்தின் வெளியீடு மராட்டிய மாநில தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் அந்த தியேட்டரில் திரண்டனர்.

51 பெண்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள். 21 பெண்கள் தியேட்டர் முன்பு பொங்கலிட்டனர். ரசிகர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. ரஜினியின் 69 அடி உயர கட்-அவுட் திறக்கப்பட்டது.

ரசிகர் மன்றம்

காலை 6 மணிக்கு ‘பேட்ட’ படம் திரையிடப்பட்டது. அப்போது, ரஜினியின் அறிமுக காட்சி வந்ததும் மேள, தாளங்கள் முழங்க ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினார்கள். இந்த ஏற்பாடுகளை மாநில தலைவர் எஸ்.கே.ஆதிமூலம் தலைமையில் மாநில செயலாளர் சிவகுமார் ராமச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

இதில், துணை செயலாளர் கலியமூர்த்தி, சதிஷ் ராமராஜ், வைரமணி, மகளிர் அணி செயலாளர் லதா மணிமாறன், இளைஞர் அணி செயலாளர் சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட மும்பையின் பல்வேறு கிளைகளை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story