பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக கொண்டாட வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு


பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக கொண்டாட வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 2:19 PM GMT)

‘இந்த ஆண்டு பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக அனைவரும் கொண்டாட வேண்டும்’ என்று வேலூரில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் ராமன் கேட்டுக் கொண்டார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் வேலூர் டி.கே.எம். பெண்கள் கலைக்கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் மணிநாதன், முதல்வர் சுதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜான்பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ராமன் அவரது மனைவி தேவியுடன் கலந்து கொண்டார். விழாவை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமாகும். மக்களுக்கு உணவினை வழங்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பெருமைப்படுத்தி உலகறிய செய்திடும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலன்று காலை சூரியனை வணங்கி, தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், இனம், மொழி, வாழ்க்கை முறையை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக கொண்டாடி வருகிறோம்.

ஜல்லிக்கட்டு மீட்பு நடவடிக்கை மூலம் பொங்கல் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களின் பண்டிகையாகும். இதனை நமது முன்னோர்கள் எப்படி கொண்டாடினார்கள்? தற்போது எப்படி கொண்டாடி வருகிறோம் என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இந்த ஆண்டு பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் பண்டிகையாக அனைவரும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் ராமன், மனைவி தேவி மற்றும் மாணவிகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும் விழாவில் கலந்து கொண்ட வி.ஐ.டி.யில் படிக்கும் வெளிநாட்டு மாணவ–மாணவிகள் மற்றும் சக்தி அம்மாவின் வெளிநாட்டு பக்தர்களுக்கு கலெக்டர் ராமன் மாலை அணிவித்து வரவேற்றார்.

தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி மாணவி ஒருவர் மாட்டு வண்டி ஓட்ட அதில், 10–க்கும் மேற்பட்ட மாணவிகள் பயணம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விழாவில், உதவி சுற்றுலா அலுவலர் இளம்முருகன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story