வேலூரில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு ஒரு கிலோ ரூ.35–க்கு விற்பனை


வேலூரில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு ஒரு கிலோ ரூ.35–க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:15 PM GMT (Updated: 11 Jan 2019 2:21 PM GMT)

வேலூரில் தக்காளி விலை கிடு, கிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.30–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர்,

நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர், ராயக்கேட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ, மினிலாரி போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதே போல் வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம், சில்லறை விலையில் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய கடைகளுக்கும் காய்கனிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து நேதாஜி மார்க்கெட்டிற்கு லாரிகளில் தக்காளி கொண்டு வரப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட விளைச்சல் குறைவால் கடந்த சில நாட்களாக நேதாஜி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை திடீரென கிடு, கிடு வென உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.10 முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தக்காளி விலை உயர்வு குறித்து நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் பாலு கூறுகையில், ‘பனிப்பொழிவு காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து மார்க்கெட்டுக்கு வழக்கமாக வருவதைவிட குறைவாக வருகிறது. நேதாஜி மார்க்கெட்டுக்கு ஒருநாளைக்கு சராசரியாக 70 டன் தக்காளி வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 50 டன் தக்காளிதான் வருகிறது. எனவே அதன் விலை திடீரென கூடியுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பின்னர் படிப்படியாக விலை குறையும்’ என்றார்.


Next Story