குதிரையின் குடலில் சிக்கிய கயிறு, பிளாஸ்டிக் உருண்டை 3½ மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நெல்லை கால்நடை டாக்டர்கள் அகற்றினர்


குதிரையின் குடலில் சிக்கிய கயிறு, பிளாஸ்டிக் உருண்டை 3½ மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நெல்லை கால்நடை டாக்டர்கள் அகற்றினர்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 3:59 PM GMT)

குதிரையின் குடலில் சிக்கிய நைலான் கயிறு, பிளாஸ்டிக் உருண்டையை 3½ மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரி டாக்டர்கள் அகற்றினர்.

நெல்லை, 

கேரளாவை சேர்ந்த குதிரை பிரியர் ஜார்ஜ். இவர் நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 12 குதிரைகளை வளர்த்து வருகிறார். இவரிடம் உள்ள 1½ வயது பெண் குதிரை கடந்த 21 நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் அவதிப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்தும் வயிற்று வலி சரியாகவில்லை.

இதையடுத்து ஜார்ஜ் அந்த குதிரையை நெல்லை ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு கடந்த 2-ந்தேதி அழைத்து வந்தார். கால்நடை ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் ராம்பிரபு தலைமையில், சிகிச்சையியல் துறை தலைவர் பொன்னுசாமி, டாக்டர்கள் இன்பவேலன், சுந்தர்ராஜன் ஆகியோர் குதிரைக்கு முழு உடல் பரிசோதனை செய்தனர். அப்போது குதிரைக்கு சாணம் போடுவதில் சிரமம் இருப்பதும், மேலும் குடல்கள் வீங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. குதிரையின் வயிற்றில் ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் குடல் அமைப்பில் வீக்கம் இருப்பதும், அசைவுகள் குறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குதிரையின் குடல் அசைவை பெருக்குவதற்காக ஊசிமூலமாகவும், வாய் வழியாகவும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து குதிரைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் தலைமையில் டாக்டர்கள் விஷ்ணு குருபரன், பாரதிதாசன், கோகிலா, நினு ஆகியோர் கொண்ட குழுவினர் குதிரைக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்தனர். குதிரையின் வயிற்று பகுதி கிழிக்கப்பட்டு குடல் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெருங்குடலின் ஒரு பகுதியில் இருக்கமான குடல் அடைப்பு ஒன்று கண்டறியப்பட்டது.

அந்த குடல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து பார்த்தபோது “நைலான் கயிறு” மற்றும் பிளாஸ்டிக் கால் ஆன உருண்டை திடப்பொருள் இருந்தது. அதனை மருத்துவ குழுவினர் அகற்றினர். பின்னர் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியானது உரிய முறையில் தைத்து அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. இந்த சிகிச்சை 3½ மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 4 மணி நேரம் கழித்து குதிரை மயக்க நிலையில் இருந்து மீண்டும் எழுந்து நின்றது. 7 மணி நேரத்துக்குபின் குதிரை சாணம் போட்டு சகஜ நிலைக்கு வந்தது.

இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர்கள் குழுவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜாண்சன் ராஜேஷ்வர் பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் கூறுகையில், “குதிரைக்கு குடலில் அறுவை சிகிச்சை என்பது இந்தியாவில் மிகவும் அரிதான ஒன்றாகும். நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் முதன் முறையாக குதிரைக்கு இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. “டிரிபிள் டிரிப்” எனப்படும் 3 மயக்க மருந்துகள் கொண்ட கலவை செலுத்தப்பட்டு மயக்க நிலைக்கு குதிரை கொண்டு செல்லப்பட்டது. இந்த குதிரை கட்டப்பட்டிருந்த இடத்தில் கூடாரம் அமைக்க பயன்படுத்தப்பட்ட நைலான் கயிறு மற்றும் பிளாஸ்டிக் மேற்கூரையை சாப்பிட்டு இருக்கலாம். இந்த குதிரையை அப்படியே விட்டிருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். உரிய நேரத்தில் கொண்டு வந்ததால் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றி உள்ளோம்” என்றார்.

Next Story