“இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


“இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 4:09 PM GMT)

“இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்“ என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தேவையான சக்கர நாற்காலி, சாய்வு தளம், தனிக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளதா என்பதை உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்கு பின்பாகவும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட தேவையான விழிப்புணர்வு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் கல்வி குழுவினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகளை நடத்தப்பட வேண்டும். தேசிய வாக்காளர் தினத்தன்று அனைத்து அலுவலர்களும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி பதாகைகளை பார்வையிட்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி கலெக்டர்கள் விஜயா, கோவிந்தராசு மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story