நெல்லை அருகே இரட்டை கொலை வழக்கு: அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


நெல்லை அருகே இரட்டை கொலை வழக்கு: அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 5:00 PM GMT)

நெல்லை அருகே இரட்டை கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஸ்ரீவைகுண்டம்,

வல்லநாடு அருகே பக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் சுடலைமணி (வயது 18). இவர் நெல்லையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 26-ந்தேதி இரவில் பக்கப்பட்டி விலக்கில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற சுடலைமணியின் தாத்தா முத்துசாமியையும் (65) மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது ஏற்பட்ட தகராறில், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதற்கு பழிக்குப்பழியாக சுடலைமணி, முத்துசாமி ஆகிய 2 பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது.

இரட்டைக்கொலை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன்கள் மாரிமுத்து (23), சின்னதம்பி (22) ஆகிய 2 பேரும் ஆலங்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் 2பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தலைமறைவான மாரிமுத்து தம்பி அருண்குமார், உறவினரான மற்றொரு சின்னதம்பி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

இதற்கிடையே மாரிமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பாவுக்கு பரிந்துரை செய்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில், மாரிமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மாரிமுத்து, சின்னதம்பியிடம் போலீசார் வழங்கினர்.


Next Story