அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 456 பயோமெட்ரிக் வருகை பதிவு கருவி முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் வழங்கினார்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 456 பயோமெட்ரிக் வருகை பதிவு கருவி முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Jan 2019 9:30 PM GMT (Updated: 11 Jan 2019 5:03 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 456 பயோமெட்ரிக் வருகை பதிவு கருவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு “பயோ மெட்ரிக்” வருகை பதிவு முறை வரும் 18-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து பள்ளிகளுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் தலைமை தாங்கி ஆசிரியர்களிடம் 456 வருகை பதிவு கருவிகளை வழங்கினார். கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் வி.சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் எஸ்.சங்கரய்யா, கே.சீனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், 3 மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், 13 வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் 13 அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களுக்கு தலா ஒரு கருவிகள் வழங்கப்பட்டன. மேலும், 212 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா 2 கருவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து இந்த கருவிகளில் எவ்வாறு ஆசிரியர்களும், அலுவலர்களும் விரல் ரேகை மூலம் வருகை பதிவை பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து அலுவலர்கள் விளக்கி கூறினர். தினமும் 2 முறை இந்த கருவியில் வருகை பதிவேட்டை ஆசிரியர்களும், அலுவலர்களும் பதிவு செய்ய வேண்டும். இந்த முறை வரும் 18-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story