சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குமுன் கால்வாய்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குமுன் கால்வாய்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:30 PM GMT (Updated: 11 Jan 2019 5:23 PM GMT)

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குமுன் கால்வாய்களை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளை பயன்படுத்தியும், சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தியும் அப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பாசன வசதிகள் பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி குடிநீருக்காகவும் அதனை பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த வாரம் பாசனத்திற்காகவும், ஏரிகளுக்காகவும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் திருவண்ணாமலை மாவட்ட பகுதிக்கு இடதுபுற கால்வாய் வழியாகவும், விழுப்புரம் மாவட்ட பகுதிக்கு வலதுபுற கால்வாய் வழியாகவும் செல்கிறது.

இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் ஆங்காங்கே தூர்ந்து போன நிலையிலும் ஷட்டர்கள் சேதமான நிலையிலும் காணப்படுகிறது. இதனால் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைக்கோடி பகுதி ஏரிக்கும் மற்றும் விவசாய நிலங்களுக்கும் செல்வது கிடையாது.

இதனால் ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் தண்ணீரானது வீணாகிவருகிறது. எனவே அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் தற்போது திறந்து விடப்படும் தண்ணீர் வீணாகாமல் அனைத்து ஏரிகளுக்கும் செல்லும் வகையில் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து ஏரிக்கு செல்லும் கால்வாய்களையும், கிளை கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story