கமிஷனர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் மீது பரபரப்பு புகார்


கமிஷனர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் மீது பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:15 PM GMT (Updated: 11 Jan 2019 5:43 PM GMT)

கமிஷனர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் மண்ணடி தெருவை சேர்ந்தவர் ஷீலா (வயது 42). இவரது கணவர் இறந்துவிட்டார். ஷீலா, வீடு வீடாகச்சென்று கீரை விற்பார். வீட்டு வேலையும் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

நேற்று பகலில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ஷீலா அலுவலக வாசலில் திடீரென்று தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். காவலுக்கு இருந்த பெண் போலீசார் தீக்குளிக்கவிடாமல் காப்பாற்றினார்கள்.

தீக்குளிக்க முயற்சி செய்தது ஏன்? என்பது குறித்து ஷீலா போலீஸ் விசாரணையில் கூறியதாவது:-

வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம் நான் ஏலச்சீட்டு கட்டியிருந்தேன். தினமும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தின் மூலம் ஏலச்சீட்டை கட்டினேன். 2 ஏலச்சீட்டுகளில் ரூ.4 லட்சத்திற்கு பணம் கட்டி வந்தேன்.

பணம் கட்டி முடித்தபிறகு ரூ.4 லட்சம் பணத்தை தர மறுக்கிறார்கள். ஏலச்சீட்டு நடத்திய பெண் தனது கணவரோடு சேர்ந்து என்னை அடித்து உதைக்கிறார். பணத்தை கேட்டால், உன்னை தீர்த்து கட்டிவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள்.

இதுபற்றி வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்திலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் இந்த போராட்டத்தை நடத்தினேன். பணம் கிடைக்காததால் எனது மகனை படிக்க வைக்கமுடியவில்லை. இவ்வாறு அந்த பெண் கூறினார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். கமிஷனர் அலுவலக வாசலில் இதுபோன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story