செங்குறிச்சி அருகே செல்போன் கடை ஊழியர் கொலை, போலி நாகரத்தின கல்லை விற்ற தகராறில் கொல்லப்பட்டது அம்பலம்


செங்குறிச்சி அருகே செல்போன் கடை ஊழியர் கொலை, போலி நாகரத்தின கல்லை விற்ற தகராறில் கொல்லப்பட்டது அம்பலம்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 5:55 PM GMT)

செங்குறிச்சி அருகே போலி நாகரத்தின கல்லை விற்றதால் ஏற்பட்ட தகராறில் செல்போன் கடை ஊழியர் கொல்லப்பட்டது அம்பலமாகி உள்ளது.

வடமதுரை, 

திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார் (வயது 27). இவர் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேம்பார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த ஹரிகரன் (23) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு செங்குறிச்சி அருகே உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்ற ஹரிகரன், சிவக்குமார் ஆகியோருக்கும், அந்த பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் இடையே பணம் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர் கத்தியால் குத்தியதில் சிவக்குமார் பலியானார். இதுதொடர்பாக, வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், நாகரத்தின கல் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

ஹரிகரனின் தந்தை சந்தானகிருஷ்ணன் (47). இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகரத்தின கல் வாங்கித் தருவதாக நத்தம் மலையூரை சேர்ந்த முருகன் (43) என்பவர் கூறியுள்ளார். இதற்காக அவரிடம் ரூ.3 லட்சத்தை முன்பணமாக சந்தானகிருஷ்ணன் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை வாங்கிக்கொண்ட முருகன் அவருக்கு சிவப்பு நிற பாசியை கொடுத்து அதனை நாகரத்தின கல் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தானகிருஷ்ணன், முருகனிடம் தகராறு செய்ததுடன் பணத்தை திருப்பி தருமாறு கூறியுள்ளார். இதன்காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தானகிருஷ்ணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட முருகன், தன்னிடம் உண்மையான நாகரத்தின கல் இருப்பதாகவும் அதனை மாமரத்துப்பட்டியில் உள்ள தனது நண்பர் கரந்தனின் தோட்டத்திற்கு வந்து பெற்று செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சந்தானகிருஷ்ணன், தனது மகன் ஹரிகரன், அவருடைய நண்பர் சிவக்குமார் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மாமரத்துப்பட்டிக்கு சென்றார். அங்கு தனது நண்பர்களுடன் காத்திருந்த முருகன் நாகரத்தின கல்லை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார்.

நாகரத்தின கல்லை வாங்கிய சிவக்குமார், அதனை கையில் வைத்துக்கொண்டு ஏற்கனவே சந்தானகிருஷ்ணன் கொடுத்த ரூ.3 லட்சத்தை திருப்பி தருமாறு முருகனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக் குமாரை சரமாரியாக குத்தினார்.

உடனே, அங்கிருந்து தனது நண்பர்களுடன் தப்பிச் சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த சிவக்குமாரை, ஹரிகரன் மற்றும் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிவக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சந்தானகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், முருகன், கரந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story