பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை அமோகம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 6:38 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊத்தங்கரை சந்தையில் மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாட்டுசந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கூடுகிறது. இந்த சந்தையில் திருப்பத்தூர், அரூர், மொரப்பூர், செங்கம், திருவண்ணாமலை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாடுகளை விற்பனை செய்ய இங்கு வருகிறார்கள். இந்த மாடுகளை வாங்குவதற்கு அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள்.

இந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். வழக்கமான சந்தை நாட்களை விட அதிகபடியான மாடுகள் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் எருமை ஒன்று ரூ 15 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையும், காளை மாடு ஜோடி ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரையும் விற்பனையானது. கறவை மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையும் விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

Next Story