விழுப்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம்


விழுப்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 6:57 PM GMT)

விழுப்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன்னீர் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம், 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக மண் பானைகள் குயவர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொங்கலுக்கு பெயர்போன பன்னீர் கரும்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

விழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்தனர். நன்கு செழித்து வளர்ந்த இந்த பன்னீர் கரும்புகளை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு அறுவடை செய்யப்பட்டதில் 20 பன்னீர் கரும்புகள் கொண்டது ஒரு கட்டாக கட்டப்பட்டு, வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் கரும்பு கட்டுகள் மினி லாரி, லாரி, டிராக் டர்களில் விழுப்புரம் மட்டுமின்றி பல்வேறு வெளியூர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு சில வியாபாரிகள், நேரடியாக தோட்டத்திற்கு வந்து விவசாயிகளிடம் விலைபேசி ஒரு கட்டு ரூ.200 முதல் ரூ.250 வரை கரும்புகளை வாங்கிச்செல்கிறார்கள். பொங்கல் விற்பனையில் அங்கம் வகிக்கும் மஞ்சள் கொத்துகளையும் விழுப்புரம் அருகே ஆலத்தூர், நன்னாடு, விராட்டிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். நன்கு செழித்து வளர்ந்த மஞ்சள் கொத்தையும் கடந்த சில நாட்களாக விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

Next Story