விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2019 11:30 PM GMT (Updated: 11 Jan 2019 7:54 PM GMT)

விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பழுதடைந்துள்ள தேர்களை மாற்றி புதிய தேர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சர்க்கரை ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்க உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதை குழந்தைகளுக்கு சொல்லித்தர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். கோபி பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story