வாகன போக்குவரத்துக்கு தயாராகும் ஈரோடு மேம்பாலம்; முதல்–அமைச்சர் திறந்து வைக்கிறார்


வாகன போக்குவரத்துக்கு தயாராகும் ஈரோடு மேம்பாலம்; முதல்–அமைச்சர் திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 7:54 PM GMT)

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வாகன போக்குவரத்துக்கு தயாராகி வருகிறது. விரைவில் முதல்–அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாநகரின் முதல் மேம்பாலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதா இந்த மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டார். பிரப் ரோடு–பெருந்துறை ரோடுகளில் இருந்து ஈ.வி.என். ரோட்டை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் வடிவமைத்து கட்டப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.58 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவை தொடர்ந்து மேம்பால பணிகள் தொடக்கம் சற்று தாமதமாகியது. பின்னர் தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017–ம் ஆண்டு ஜூன் மாதம் 11–ந் தேதி மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மாதம் 30–ந் தேதி முதல் மேம்பால பணிகள் முழு வீச்சில் நடந்தன.

இந்த மேம்பாலம் கட்ட 24 மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 18 மாதங்களில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிப்போம் என்ற உத்தரவாதத்துடன் ஒப்பந்ததாரர் பணியை தொடங்கினார். அதே வேகத்தில் எந்த தடையும் இல்லாமல் பணிகள் நடந்தன. ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், மின்சார கேபிள் பதிக்கும் திட்டம், ஊராட்சிக்கோட்டை திட்டம் ஆகியவை நடந்து வருவதால் போக்குவரத்து இடைஞ்சலை தீர்க்க மேம்பாலமும் மிகவும் அவசியம் என்பதால் இதன்பணிகள் விரைந்து நடந்து வந்தன. தற்போது மேம்பாலத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது. பாலத்தில் கைப்பிடி சுவர்கள் அமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணி, ரோட்டுக்கு தார் போடும் பணி ஆகியவை இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தின் திறப்பு விழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த பாலத்தை முதல்– அமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

மேலும் இந்த மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவின்போது திண்டல் வரை மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மேம்பாலம் அமைய உள்ள பகுதியில் மண் பரிசோதனை கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

இதுபோல் மேட்டூர் ரோட்டையும், அரசு ஆஸ்பத்திரி மேம்பாலத்தையும் இணைக்கும் வகையில் இணைப்பு மேம்பாலத்தை விரைவில் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story