வேடசந்தூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது லாரி மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி


வேடசந்தூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது லாரி மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 8:19 PM GMT)

வேடசந்தூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது லாரி மோதியதில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர்கள் பாக்கியராஜ் (வயது 29), அருண்குமார் (33), தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயசீலன் (40). விவசாயிகளான இவர்கள், தங்கள் தோட்டங்களில் விளைந்த வெங்காயத்தை திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக சரக்குவேனில் ஏற்றிக் கொண்டு 3 பேரும், நேற்று அதிகாலை புறப்பட்டனர். சரக்குவேனை கொல்லப்பட்டியை சேர்ந்த குமார் (32) ஓட்டினார். கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டி பிரிவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சரக்குவேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதையடுத்து சாலையில் சரக்குவேனை நிறுத்தி டயரை மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பாக்கியராஜும், குமாரும் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். மற்ற 2 பேரும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி பழுதான சரக்குவேனின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பாக்கியராஜும், குமாரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சாலையோரத்தில் நின்றதால் அருண்குமாரும், ஜெயசீலனும் உயிர் தப்பினர். இதற்கிடையே லாரி மோதியதில் சரக்கு வேனும் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் ஏறி கவிழ்ந்தது. இதில் சரக்குவேனில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறின.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story