சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை கிண்டல் செய்து நடித்து வலைத்தளத்தில் பதிவிட்ட 4 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை கிண்டல் செய்து நடித்து வலைத்தளத்தில் பதிவிட்ட 4 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:45 PM GMT (Updated: 11 Jan 2019 10:40 PM GMT)

சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை சினிமா வசனத்துடன் கிண்டல் செய்து நடித்து ‘வாட்ஸ்அப்‘ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

சிவகாசி,

கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்து பதிவிட்டு சிலர் வீண் வம்பையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை பற்றி, அந்த போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே கேலியான சினிமா வசனத்தை நடித்துக்காட்டி 4 வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துமாரியப்பன் அளித்த புகார் வருமாறு:–

நான் பணியில் இருந்தபோது தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு 4 வாலிபர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நான், அந்த வாலிபர்களுக்கு அனுமதி அளித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது ‘வாட்ஸ்அப்‘பில் ஒரு நம்பரில் இருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

அந்த வீடியோவை பார்த்த போது, அதில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீஸ் நிலையத்தை அவதூறான முறையிலும், கிண்டல் செய்தும் சினிமா வசனத்துடன் அந்த 4 வாலிபர்களும் நடித்துக் காட்டுவது போல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்தார். தகாத வார்த்தையால் பேசுவது, காவல்துறையை களங்கப்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆனையூர் துலுக்கப்பட்டியை சேர்ந்த சீனிவாசகன் மகன் முருகேசன் (வயது 25), பிச்சைக்கனி மகன் தங்கேஸ்வரன் (23), மாரனேரி அருகில் உள்ள ராமச்சந்திராபுரம் முனியசாமியின் மகன் குருமகன் (24), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் ஈஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாரையும், போலீஸ் நிலையத்தையும் கிண்டல் செய்து போலீஸ் நிலைய வாசலில் நின்று வாலிபர்கள் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது27). இவர் தூத்துக்குடியில் ஒரு அரசியல் கட்சி தலைவரின் நினைவு நாளை முன்னிட்டு செல்வதற்காக அனுமதி பெற தனது நண்பர்கள் 8 பேருடன் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற வாகனத்தை சப்–இன்ஸ்பெக்டர் சீனிராஜ் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அதனை ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவில் போலீசாரை மிரட்டும் விதமாக சினிமா பாடலை ‘டிக்–டாக்’ செயலி மூலம் இணைத்து, சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுட்டதாக கூறப்படுகிறது. போலீசாரை களங்கப்படுத்துவது போன்று இது அமைந்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவமாதா விசாரணை நடத்தி, 9 பேரை கைது செய்தார்.


Next Story