திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவியை தாக்கிய கள்ளக்காதலன் - குளச்சல் பஸ் நிலையத்தில் பரபரப்பு


திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவியை தாக்கிய கள்ளக்காதலன் - குளச்சல் பஸ் நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:26 PM GMT (Updated: 11 Jan 2019 11:26 PM GMT)

திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவியை அவரது கள்ளக்காதலன் தாக்கிய சம்பவம் குளச்சல் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குளச்சல்,

குளச்சல் பஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை சீருடையுடன் கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். அருகில் ஒரு வாலிபர் நின்று நீண்ட நேரம் சிரித்து பேசினர். இந்தநிலையில் திடீரென வாலிபர், மாணவியின் கன்னத்தில் சரமாரியாக தாக்கினார். இதனால் அங்கு நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது பஸ் நிலையத்தில் பயணிகளோடு நின்ற ஒருவர், மாணவியிடம் சென்று தாக்கிய வாலிபர் யாரென்று கேட்டார். யாரென்று தெரியவில்லை, திடீரென தன்னை தாக்கி விட்டதாக மழுப்பலாக பதில் அளித்தார். இதற்கிடையே அங்கு வந்த போலீசார், வாலிபரையும், மாணவியையும் பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் திருமணத்துக்கு மறுத்ததால் மாணவி தாக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் இதுபற்றிய விவரம் வருமாறு:-

மாணவியை தாக்கிய வாலிபர், திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர். 25 வயது மதிக்கத்தக்க அவர் மினி பஸ்சில் கண்டக்டராக உள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. பஸ்சில் கல்லூரிக்கு சென்று வரும் போது கண்டக்டருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணமான வாலிபர் என்று தெரிந்தே அந்த மாணவியும் அவருடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை, வாலிபர் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மாலையில் குளச்சல் பஸ் நிலையத்துக்கு வந்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாலிபர், மாணவியிடம் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த வாலிபர், மாணவியின் கன்னத்தில் சரமாரியாக அறை விட்டார். மாணவியிடம் சென்று நடந்த சம்பவத்தை பற்றி கேட்டவர், மாணவி படிக்கும் கல்லூரியில் முதல்வராக இருப்பவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வாலிபரையும் மாணவியையும் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர். குளச்சல் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story