சுங்குவார்சத்திரம் அருகே ஆயில் திருடிய டிரைவர் உள்பட 2 பேர் கைது சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டபோது சம்பவம்


சுங்குவார்சத்திரம் அருகே ஆயில் திருடிய டிரைவர் உள்பட 2 பேர் கைது சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டபோது சம்பவம்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 5:01 PM GMT)

சுங்குவார்சத்திரம் அருகே சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்ட ஆயிலை திருடி விற்றது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பாப்பாங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு ஆயில் பதுக்கி விற்பதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்- இன்பெக்டர்கள் அசோகசக்கரவர்த்தி, சரவணன் ஆகியோர் பாப்பாங்குழியில் டில்லிகணேஷ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் சோதனை செய்தனர். அப்போது கட்டுமான பணிக்கு உபயோகப்படுத்தும் ஆயிலை விற்பனை செய்வது தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு டேங்கர் லாரி மூலம் 16 ஆயிரம் லிட்டர் ஆயில் எடுத்து செல்வதும் வழியில் யாருக்கும் தெரியாமல் திருடி இந்த மாந்தோப்பில் உள்ள பேரல்களில் நிரப்பி விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயிலை திருடி விற்பனை செய்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 26), லாரி டிரைவரான வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஞானமகிமைதாஸ் (35) ஆகியோரை கைது செய்தனர். டேங்கர் லாரி பறிமுதல் தெய்யப்பட்டது.

மேலும் டில்லிகணேஷ், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பரமசிவன், ராஜா, சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story