ரூ.98 லட்சம் நகை கொள்ளையில் 7 பேர் பிடிபட்டனர்; மேலும் 3 பேரை பிடிக்க தேடுதல்வேட்டை


ரூ.98 லட்சம் நகை கொள்ளையில் 7 பேர் பிடிபட்டனர்; மேலும் 3 பேரை பிடிக்க தேடுதல்வேட்டை
x
தினத்தந்தி 12 Jan 2019 10:45 PM GMT (Updated: 12 Jan 2019 8:39 PM GMT)

ரூ.98 லட்சம் நகை கொள்ளையில் தொடர்புடைய 7 பேர் பிடிபட்டனர். மேலும் 3 பேரை போலீசார் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கல்யாண் ஜுவல்லரி நகைக்கடைக்கு சொந்தமான ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கடந்த 7–ந் தேதி கோவைக்கு ஊழியர்கள் காரில் கொண்டு வந்தனர். கேரள–தமிழக எல்லைப்பகுதியான நவக்கரை அருகே வந்த போது ஒரு கும்பல் காரை வழிமறித்து ஊழியர்களை மிரட்டி ரூ.98 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வேலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே போலீசாரின் தேடுதல் வேட்டையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் சிக்கி உள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் 3 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது

இதில் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. கேரளாவை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கும்பல், நகைகளை கொண்டு வந்த காரை பின்தொடர்ந்து சென்று கைவரிசை காட்டியுள்ளனர். பிடிபட்ட 7 பேரில் 3 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மொத்தம் 12 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர். 7 பேரை பிடித்துள்ளோம். இதில் பைரோஸ் உள்பட முக்கிய ஆசாமிகள் இன்னும் பிடிபட வில்லை. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் பைரோசிடம் இருப்பது தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் உள்பட பல்வேறு இடங் களில் பைரோஸ் உள்பட 3 பேரை தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ஓரிரு நாளில் கொள்ளையில் தொடர்புடைய அனைவரும் சிக்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story