ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் பணி இடைநீக்கம்


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2019 9:59 PM GMT (Updated: 12 Jan 2019 9:59 PM GMT)

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன். இவருக்கு சொந்தமான இடம் திருச்சி விமான நிலையம் அருகே உள்ளது. அந்த இடம் தொடர்பாக சீதாராமனுக்கும், இன்னொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் அருள்அமரன் (வயது 55) விசாரணை நடத்தினார்.

இடம் தொடர்பான புகாரில் சீதாராமனுக்கு சாதகமாக செயல்பட ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என அவர் கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சீதாராமன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனை சந்தித்து புகார் கொடுத்தார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.50 ஆயிரத்தை கடந்த 8-ந்தேதி இரவு, உதவி கமிஷனர் அருள்அமரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சீதாராமன் கொடுத்தார். அப்போது அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி கமிஷனர் அருள் அமரனை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தி சில குறிப்புகள் அடங்கிய ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதன் பின்னர், திருச்சி கிராப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிலும் விடிய, விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேர சோதனைக்கு பின்னர் அங்கு சில சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து அருள்அமரன் கைது செய்யப்பட்டு 9-ந் தேதி காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் உதவி கமிஷனர் மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்தும், அவர் மீது பதிவாகி உள்ள வழக் கின் சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டியும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினர். அதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் உதவி கமிஷனர் அருள்அமரனை பணி இடைநீக்கம் செய்து நேற்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story