திருவாரூர் மாவட்டத்தில் 536 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன அமைச்சர் காமராஜ் தகவல்


திருவாரூர் மாவட்டத்தில் 536 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:54 PM GMT (Updated: 12 Jan 2019 10:54 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 536 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் காமராஜ் கூறினார்.

குடவாசல்,

குடவாசல் அருகே உள்ள மூலங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லின் எடை சரியாக உள்ளதா? என்றும், நெல்லின் தரம் எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். அப்போது எடை வைத்து அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டையை எடுத்து வந்து எடையை சரி பார்த்து ஆய்வு செய்தார். விவசாயிகள் கொண்டு வரும் நெல் சுத்தமாக, ஈரப்பதம் இன்றி இருக்க வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம், வங்கி மூலம் துரிதமாக அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். அப்போது ஒரு விவசாயி 1 மூட்டைக்கு ரூ.30 பிடிக்கிறார்கள் என அமைச்சரிடம் கூறினார். உடனே அமைச்சர், அதிகாரிகளிடம் இதுபோன்று எப்போதும் புகார் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் வசதிக்காக 536 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதலாக திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலில் தமிழகத்திலேயே பெரிய விவசாய பொருட்களின் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

தங்கள் பகுதிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிட வசதி வேண்டும் என்றால் 40 செண்ட் நிலம் இருந்தால் போதும் அல்லது அரசு புறம்போக்கு நிலம் இருந்தால் உடனடியாக கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், குடவாசல் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாப்பா.சுப்பிரமணியன், ஓகை கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story