உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 13 Jan 2019 6:54 AM GMT (Updated: 13 Jan 2019 6:54 AM GMT)

அவளுக்கு 27 வயது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவளுக்கு திரு மணம் நடந்தது.

வளுக்கு 27 வயது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவளுக்கு திரு மணம் நடந்தது. கணவர் சுயதொழில் செய்து வருகிறார். அவர் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு தங்கை ஒருத்தி உண்டு. அவள் கல்லூரியில் படிக்கும்போதே ஒருவரை காதலித்து மணந்துகொண்டாள். முதலில் அவளது குடும்பத்தினர் எதிர்த்தபோதும், அவள் கர்ப்பிணியானதும் சேர்த்துக்கொண்டார்கள். அவளுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. குடும்பமே அந்த குழந்தையை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 27 வயது மருமகள் தாய்மையடைவது தாமதமாகிக்கொண்டே இருந்தது, மாமியாருக்கு கவலையை ஏற்படுத்தியது. மருமகளிடம் பாசமாக இருந்தாலும், அவளுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமோ என்ற கோணத்தில் அடிக்கடி கேள்விகளை எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த மருமகள், ‘எனக்கு எந்த குறையும் இல்லை. என் கணவருக்கும் எந்த குறையும் இல்லை. எங்களுக்கு எப்போது குழந்தை தேவையோ அப்போது எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அதுவரை நீங்கள் மனக்குறை இல்லாமல் அமைதியாக இருங்கள்’ என்று நறுக்கென்று சொன்னாள்.

மருமகள் இப்படி சொன்னதை, தனது கர்வத்திற்கு விழுந்த அடியாக மாமியார் கருதினாலும் மருமகளிடம் மோதவில்லை. மோதினால், கூட்டுக் குடும்பத்தில் இருந்து மகனை பிரித்துச்சென்றுவிடுவாள் என்று பயந்தார். அதோடு அவள் கவுரவமாக வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்துக்கொண்டும் இருந்தாள். ஆனால் நாத்தனார் அடிக்கடி இவளிடம் மோதிக்கொண்டிருந்தாள்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் மருமகள் திடீரென்று கர்ப்பமானாள். மாமியார் மகிழ்ச்சியடைந்தார். பாசமாக மருமகளை கவனித்துக்கொண்டார். அந்த பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவரிடம் அவரே மருமகளை அழைத்துச்சென்று பரிசோதித்தார். ஒவ்வொரு மாதமும் பரிசோதனைகளுக்காக அவரே மரு மகளை அழைத்துச் செல்வதையும் வழக்கமாக்கியிருந்தார்.

மருமகளது தாய் வீடு கிராம பகுதியில் இருந்தது. அதனால் புகுந்த வீட்டிலேயே இருந்து, வழக்கமாக பரிசோதனை செய்யும் மருத்துவமனையிலே பிரசவத்தைவைத்துக்கொள்ளலாம் என்று மாமியார் ஆலோசனை கூறினார். பிரசவ செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக சொன்னார். அதற்கு மருமகள் குடும்பத்தினரும் சம்மதித்தார்கள்.

மாமியார் சற்று குள்ளமானவர். அவரது மகளும் அதுபோன்ற பாரம்பரியத்தை கொண்டிருந்ததால், அவளுக்கு சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறந்திருந்தது. ஆனால் இந்த மருமகளோ உயரமானவள். சுகப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாக டாக்டரும் கூறியிருந்தார்.

ஆனால் டாக்டர் சுகப்பிரசவம் என்று கூறும்போதெல்லாம் மாமியார் குறுக் கிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ‘சுகப்பிரசவம் தான் வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. குழந்தை எந்த சேதமும் இன்றி பிறக்கவேண்டும். அதற்காக நீங்கள் சிசேரியன் செய்தாலும் பரவாயில்லை..’ என்று டாக்டரிடம் அவ்வப்போது வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.

அவளுக்கு நிறைமாதமானது. பிரசவ தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அவளை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். மாமியாரும் அங்கேயே தங்கிவிட்டார். டாக்டர்கள் பரிசோதனைக்கு வரும்போதெல்லாம், ‘சிசேரியன் பண்ணுறதுதான் நல்லது’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் திரும்பத்திரும்ப அவ்வாறு சொன்னதை கேட்டு அருகில் நின்றிருந்த நர்ஸ் குழம்பினார். அவர், மாமியாரை தனியாக அழைத்து ‘நாங்களே சுகப் பிரசவத்திற்கு முயற்சிக்கும்போது நீங்கள் ஏன் சிசேரியனுக்கு கட்டாயப்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.

அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மாமியார், ‘என் மகளுக்கும், மருமகளுக்கும் ஆகாது. அடிக்கடி யார் பெரியவங்க என்ற போட்டி வரும். என் மகளுக்கு சிசேரியன் நடந்திருக்கு. இவளுக்கு சுகப்பிரசவம் என்றால் அதை சொல்லி இவள் என் மகளை குத்திக்காட்டுவாள். அதனாலதான் இவளுக்கும் சிசேரியன் பண்ணணும்னு சொல்றேன். பிரசவ செலவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் அதுதான் காரணம்..’ என்றார்.

‘இப்படியும் ஒரு மாமியாரா?’ என்பதுபோல் வெறுப்போடு பார்த்துவிட்டு நர்ஸ் கடந்துபோய்விட்டார்.

எப்படி எல்லாம் நடக்குது பார்த்தீங்களா?

- உஷாரு வரும்.

Next Story