போடியில் தடுப்பணையில் மூழ்கி மெக்கானிக் பலி


போடியில் தடுப்பணையில் மூழ்கி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 6:27 PM GMT)

போடியில், தடுப்பணையில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

போடி, 

போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் கார்த்திக் (வயது 22). இவர், கோவையில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் நேற்று நண்பர்களுடன் போடி-முந்தல் சாலையில் உள்ள பிள்ளையார் தடுப்பணையில் குளிக்க சென்றார்.

பின்னர் அவர், நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டார். உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து போடி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ரெங்கராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கார்த்திக் பிணமாக மீட்கப்பட்டார்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த குரங்கணி போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி மெக்கானிக் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story