பொங்கல் பண்டிகையையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 மணிநேரம் படகு போக்குவரத்து நீட்டிப்பு


பொங்கல் பண்டிகையையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 மணிநேரம் படகு போக்குவரத்து நீட்டிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:43 PM GMT (Updated: 13 Jan 2019 10:43 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 மணிநேரம் படகு போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ந்து படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 17-ந்தேதி வரை 3 நாட்கள் படகு போக்குவரத்தின் நேரம் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த 3 நாட்களும் காலை 8 மணிக்கு பதிலாக 6 மணிக்கே படகு போக்குவரத்து தொடங்கிவிடும். அதேபோல மாலை 4 மணிக்கு பதிலாக 5 மணி வரை படகு சேவை நடைபெறும். சுற்றுலா பயணிகள் வசதிக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக மேலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

நேற்று பொங்கல் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அதிகாலை முதலே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதேபோல் படகுத்துறையில் அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் 2 மணிநேரம் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Next Story