பள்ளத்தில் கடல் சீற்றம்; படகுகள் சேதம்


பள்ளத்தில் கடல் சீற்றம்; படகுகள் சேதம்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:55 PM GMT (Updated: 13 Jan 2019 10:55 PM GMT)

பள்ளம் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகுகள் சேதம் அடைந்தன. ராட்சத அலைகள் எழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை கடற்கரை கிராமங்கள் உள்ளன. நாகர்கோவில் அருகே உள்ள பள்ளத்தில் நேற்று அதிகாலை திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் கடலில் ராட்சத அலைகள் எழும்பி கரையில் பயங்கரமாக மோதியது.

மேலும் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது, கிராம மக்களுக்கு முதலில் தெரியவில்லை. அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து பள்ளம் ஆலயத்தில் மணி ஒலிக்கப்பட்டு கடல் சீற்றம் பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து ஆண்களும், பெண்களும் கடற்கரைக்கு ஓடிச் சென்று கடலில் தாங்கள் நிறுத்தி வைத்திருந்த படகுகளை (வள்ளங்களை) பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் கடலில் ராட்சத அலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இதனால் படகுகளை வெளியே கொண்டு வர மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் படகுகளை கரைக்கு கொண்டு வரும் பணி வெகு நேரம் நடந்தது. அப்போது அலையின் வேகத்தில் படகுகள் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன. இதன் காரணமாக படகுகள் சேதம் அடைந்தது.

அந்த வகையில் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்ததாக மீனவர்கள் கூறுகிறார்கள். ஒரு சில படகுகள் இரண்டாக உடைந்தன. மேலும் சில படகுகளை அலை இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மீனவர்கள் எப்படியோ கஷ்டப்பட்டு தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்தனர்.

பள்ளத்தில் கடல் சீற்றம் ஏற்பட்ட அதே சமயத்தில் அருகில் உள்ள மற்ற பகுதிகளில் கடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அப்பகுதி மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் பக்கத்து கடற்கரை கிராம மக்கள் நேற்று முன்னெச்சரிக்கையுடன் இருந்தனர். பள்ளத்தில் கடல் சீற்றம் ஏற்பட்ட சம்பவம் குமரி மாவட்ட அனைத்து கடற்கரை கிராம மக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடல் சீற்றம் ஏற்பட்ட பள்ளம் மீனவ கிராமத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேற்று சென்று பார்வையிட்டார். பின்னர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சேதம் அடைந்த படகுகளையும் பார்வையிட்டார். அப்போது குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அவைத்தலைவர் சேவியர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆஸ்டின் எம்.எல்.ஏ.வும் பள்ளத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். படகுகள் சேத விவரங்களையும் மீனவர்களிடம் கேட்டறிந்தார்.


Next Story