சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி


சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
x
தினத்தந்தி 13 Jan 2019 10:58 PM GMT (Updated: 13 Jan 2019 10:58 PM GMT)

சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

சாத்தூர்,

சாத்தூர் அருகே ஒ.மேட்டுபட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப்புராஜ்(வயது 16). ஒ.மேட்டுபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தாத்தா சுந்தர்ராஜனுடன்(60) ஆடுகளை குளிப்பாட்ட சங்கர்நத்தம் தடுப்பணை அருகில் உள்ள வைப்பாற்றுக்கு சென்றார்.

இவர்களுடன் அதே கிராமத்தை சேர்ந்த முனியராஜ்(13) என்பவனும் சென்றான். அங்கு ஆடுகளை குளிப்பாட்டி விட்டு சுப்புராஜ் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் நீரில் மூழ்கினார்.

இதை பார்த்து கரையில் நின்ற முனியராஜ் கூச்சல் போட்டான். இதைதொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சுப்புராஜை ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஆழமான பகுதியில் இருந்து சுப்புராஜை பிணமாக மீட்டனர். மேலும் தகவல் அறிந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் சுப்புராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story