பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, பானை விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, பானை விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 6:32 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, பானை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

நாமக்கல்,

போகிப்பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் நேற்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்த பெண்கள் ஆவாரம்பூ, பூலாம்பூ மற்றும் வேப்பிலையை கொண்டு காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை தொடங்கினர். இன்று (செவ்வாய்க்கிழமை) வாசல் பொங்கல் வைத்து வழிபட உள்ளனர். இந்த பூஜையில் கண்டிப்பாக கரும்பு இடம் பெற்று இருக்கும். எனவே நேற்று கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் ஈரோடு, கருங்கல் பாளையம், காரவள்ளி பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்ட கரும்புகள் ஆங்காங்கே சாலை ஓரங்களிலும், வாரச்சந்தையிலும் கட்டு, கட்டாக விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு ஜோடி ரூ.80 முதல் ரூ.100 வரை கரும்பு விற்பனை செய்யப்பட்டது. போதிய மழை இல்லாத காரணத்தால் கரும்பு விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை சற்று உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் விலையை பொருட்படுத்தாத பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இதேபோல் பொங்கல் பானை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. பானையின் தரத்தை பொறுத்து ரூ.100-ல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டன. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் வீடுகளுக்கு முன்பு கோலம் போட்டு மகிழ் வார்கள்.

மேலும் கோலப்பொடி, வண்ணப்பொடி விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. இதுதவிர பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விற்பனையும் நேற்று மும்முரமாக நடைபெற்றது.

Next Story