கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Jan 2019 11:15 PM GMT (Updated: 14 Jan 2019 6:50 PM GMT)

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:–

முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது டெல்லியில் உள்ள ஏதோ ஒரு நிருபர் அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டி உள்ளார். அவர் ஏன் தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தாமல் டெல்லியில் உள்ள பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று தரையில் உட்கார்ந்து கிராம சபை கூட்டங்கள் வேண்டுமானால் நடத்தலாம். ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. தொடர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருவதால் பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்து இன்று வீழ்ச்சி அடைந்து வருகிறதே தவிர ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story