திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி


திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 7:27 PM GMT)

திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

நல்லூர்,

திருப்பூர் செரங்காடு எம்.ஜி.பி.தியேட்டர் பிள்ளையார் கோவில் 3–வது வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகன் செல்வராஜ் (வயது 30). இவர் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (23). இவர் தாராபுரம் ரோடு புதூர்பிரிவு பகுதியில் உள்ள இருசக்கர வாகன கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து தாராபுரம் சாலையில் கோவில் வழி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரகாஷ் ஓட்டினார். பின் இருக்கையில் செல்வராஜ் அமர்ந்து இருந்தார்.

தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த குப்பை லாரி ஒன்று இவர்களது மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே பிரகாசும் பலியானார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்த சென்று இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story