தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவி கடத்தி கொலை - முதியவர் கைது


தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவி கடத்தி கொலை - முதியவர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2019 11:00 PM GMT (Updated: 16 Jan 2019 8:25 PM GMT)

தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தி கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு தாலுகா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் கழுத்து மற்றும் உடலின் சில இடங்களில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா, தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ‘ஜெசி’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் (வயது 70) என்பவர் மாணவியை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கணேசனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஒரு தனிப்படையும், தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் விசாரணையில் செங்கம் பஸ் நிலையத்தில் கணேசன் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் செங்கம் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பஸ்சில் அமர்ந்து இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், கணேசன் பெங்களூருவிற்கு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து கணேசனை போலீசார் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story