திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 8:56 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவுக்கு ஒரு வரலாற்று கதை கூறப்படுகிறது. அதாவது, பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார்.

இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது. தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நேற்று நடைபெற்றது.

இதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முறுக்கு, காய், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்தபின் ‘திட்டி’ வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்துவிட்டு மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்றுவிட்டார்.

அருணாசலேஸ்வரர் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்றார். அங்கிருந்து இன்று (வியாழக்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரரும் கிரிவலம் செல்கிறார். கிரிவலம் முடித்துவிட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தின் அருகே மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது. இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சியளித்தது.


Next Story