பள்ளி மாணவிகளுடன் ரெயிலில் கலெக்டர் விழிப்புணர்வு பயணம்


பள்ளி மாணவிகளுடன் ரெயிலில் கலெக்டர் விழிப்புணர்வு பயணம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:30 PM GMT (Updated: 16 Jan 2019 9:02 PM GMT)

பள்ளி மாணவிகளுடன் கலெக்டர் கந்தசாமி விழிப்புணர்வு சுற்றுப்பயணம் சென்றார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுடன் கலெக்டர் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் மேற்கொண்டார். அன்று காலை 6.30 மணி அளவில் விழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரெயிலில் ஒதுக்கப்பட்டிருந்த 3 பெட்டிகள் மூலமாக திருவண்ணாமலை முதல் வேலூர் வரை பயணம் மேற்கொண்டதை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், மாணவிகளுடன் கண்ணமங்கலம் ரெயில் நிலையம் வரை பயணம் மேற்கொண்டார். மேலும் கலெக்டர், மாணவிகளுக்கு பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு கொடி, தொப்பி, துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

வேலூர் சென்றடைந்த மாணவிகள் அங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பஸ்களில் வேலூர் கோட்டை, அருங்காட்சியகம், அமிர்தி பூங்கா ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் மாணவிகள் அன்று மாலை திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

முன்னதாக கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் குறைந்து வரும் பாலின விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் பெண் குழந்தைகளை பாதுகாத்து, குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 2015-16-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் 8-வது இடத்தில் இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2012-13-ம் ஆண்டு குழந்தை பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 930 பெண் குழந்தைகள் என இருந்தது. தற்போது 2017-18-ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 884 பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் கீழ் கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் வட்டார அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழு உறுப்பினர்களுடன் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மகளிர் மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை தடுப்பு நடவடிக்கையாக, குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஆணா, பெண்ணா என்று கண்டறிபவர் மற்றும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story