குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:42 PM GMT (Updated: 16 Jan 2019 11:42 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அப்பனஅள்ளிகோம்பை கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் ஊராட்சி குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு முறையான குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை இயக்கும் பணியாளர் ஒருவரின் உதவியுடன் பூமிக்கடியில் குடிநீர் செல்லும் பிரதான குழாயின் கீழ் பகுதியில் மற்றொரு இணைப்பு குழாயை பொருத்தி அதன்மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செல்லும் குடிநீரின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக உறிஞ்சி விவசாய பணிகளுக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளான கிராம மக்கள் இது பற்றி தகவல் அறிந்து ஆவேசமடைந்தனர்.

இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்த வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்ட விவசாயி மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட நீர்த்தேக்க தொட்டி இயக்கும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். 2 மணி நேரம் தொடர்ந்து இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார்(பொறுப்பு) செல்வக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ், ஊராட்சி செயலர் மாது ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகுகாலனியில் 500-க்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் ஊராட்சி குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் இணைப்புக்கான இரும்பு குழாய்கள் பழுதடைந்து உள்ளன. அதற்கு மாற்றாக புதிய குழாய்களை பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் கிடைக்காததால் ஆவேசமடைந்த இந்த பகுதி மக்கள் நேற்று ஜருகு-பரிகம் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார்(பொறுப்பு) செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதே போல பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த பென்னாகரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story