விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து சாவு ஆஸ்பத்திரி சூறை–பரபரப்பு


விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து சாவு ஆஸ்பத்திரி சூறை–பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 10:00 PM GMT (Updated: 18 Jan 2019 1:26 PM GMT)

விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடினர்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடினர்.

கூலி தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் நாகசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செந்தில் ஆறுமுகம். இவர்களுக்கு அடைக்கலம் என்ற அய்யாத்துரை (வயது 24), அஜித்குமார் (20) உள்பட 3 மகன்கள், ஒரு மகள் இருந்தனர்.

அய்யாத்துரை கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவர் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

மயங்கி விழுந்து..

.

இந்த நிலையில் ராமச்சந்திராபுரத்தில் மூதாட்டி ஒருவர் இறந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. இதையடுத்து துக்க வீட்டுக்கு சென்ற அய்யாத்துரை, மயானத்தில் இருந்து தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அவரை விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யாத்துரையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அய்யாத்துரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அரசு ஆஸ்பத்திரி சூறை

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், அரசு ஆஸ்பத்திரியின் ஜன்னல், கதவு கண்ணாடிகளை உடைத்து சூறையாடினர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அய்யாத்துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக அய்யாத்துரையின் தம்பி அஜித்குமார், உறவினரான சுப்புராஜ் மகன் மணிகண்டன் (25) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story