ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 10:00 PM GMT (Updated: 18 Jan 2019 2:26 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தீவிர எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19–ந் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேர் கல்லூரி மாணவர்களிடம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். அந்த சம்பவத்தில் தொடர்புடைய பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த கெங்கையன் மகன் வக்கீல் அரிராகவன் (வயது 40) சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் நேற்று காலை வக்கீல் அரிராகவனை கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இவர் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் கோர்ட்டு அதனை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொருவர் சிறையில் அடைப்பு

அதேபோன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் ராஜபாளையத்தை சேர்ந்த ஜான்சன் மகன் மைக்கேல் அண்டோ ஜீனியஸ் (30) கரிநாள் அன்று, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு திரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது டி.சவேரியார்புரத்தை சேர்ந்த முருகன் என்பவரிடம் ஆதரவு கேட்டாராம். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மைக்கேல் அண்டோ ஜீனியஸ், முருகனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் மைக்கேல் அண்டோ ஜீனியஸ் மீது 505(1)(பி)(போராட்டத்தை தூண்டுதல்), 341(வழிமறித்தல்), 506(2)(கொலை மிரட்டல்), 294பி(சத்தம் போடுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர். இவர் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

பலத்த பாதுகாப்பு

இதற்கிடையே, சந்தோஷ்ராஜ் கைது கண்டித்து பண்டாரம்பட்டி கிராமமக்கள் நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று 2–வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடிக்கு வரும் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஏற்கனவே போராட்டம் நடந்த கிராமங்களுக்கு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டு உள்ளது. போலீசார் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்த பிறகே ஊருக்குள் அனுமதித்தனர். இதனால் பரபரப்பாக காணப்படுகிறது.


Next Story