பெரியகுளத்தில் ஓடும் பஸ்சில் மது குடித்து போதையான வாலிபரால் பரபரப்பு


பெரியகுளத்தில் ஓடும் பஸ்சில் மது குடித்து போதையான வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 10:30 PM GMT (Updated: 18 Jan 2019 5:53 PM GMT)

பெரியகுளத்தில், ஓடும் பஸ்சில் மது குடித்து போதையில் மயங்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியகுளம்,

திருப்பூரில் இருந்து நேற்று ஒரு அரசு பஸ் தேனிக்கு புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் திருப்பூரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏறி பெரியகுளத்திற்கு டிக்கெட் எடுத்து இருந்தார். அந்த பஸ் ஒட்டன்சத்திரம் வழியாக பெரியகுளம் வந்தது. பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்தது. இதை அந்த வாலிபர் பயன்படுத்திக் கொண்டு பஸ்சிலேயே மது அருந்தி வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 10.45 மணி அளவில் பெரியகுளம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து தேனிக்கு புறப்பட பஸ் தயாரானது. அப்போது பெரியகுளத்திற்கு டிக்கெட் எடுத்து வந்த அந்த போதை வாலிபரை கண்டக்டர் ரவி எழுப்பினார். ஆனால் அந்த வாலிபர் போதையில் இருந்ததால் பஸ்சில் இருந்து இறங்க முடியாமல் மயங்கி கிடந்தார். மேலும் அவர் பஸ்சிலேயே வாந்தியும் எடுத்தார். இதனால் சகபயணிகள் மதுபானத்தின் வாடை தாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர். எனினும் பொதுமக்கள் உதவியுடன் அவரை கீழே இறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை

இதைத்தொடர்ந்து பயணிகள் வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பஸ்சை போதை வாலிபருடன் பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் பாண்டி ஓட்டி சென்றார். அங்கும் போதையில் இருந்த வாலிபரை எழுப்ப முடியவில்லை. பின்னர் அவர்கள் போதை வாலிபர் குறித்து போலீஸ்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அப்போது போலீசார் புகாராக எழுதி கொடுக்கும்படி கூறினார்கள். இதையடுத்து கண்டக்டர் பெரியகுளத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பணிமனை அதிகாரிகள் 2 பேர் அங்கு வந்தனர். இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் பஸ்சின் அருகே கூட்டமாக கூடினர். பின்னர் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு பொதுமக்கள் உதவியுடன் கண்டக்டர், டிரைவர் அந்த போதை வாலிபரை பஸ்சில் இருந்து குண்டுகட்டாக கீழே இறக்கி சாலை ஓரத்தில் படுக்க வைத்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.அது வரை அந்த வாலிபர் மயக்கத்திலேயே இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story