திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு


திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 11:04 PM GMT (Updated: 18 Jan 2019 11:04 PM GMT)

திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன், விதவை மீது ஆசிட் வீசி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன், விதவை மீது ஆசிட் வீசி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஏற்றக்கோடு பரையன் கோணத்துவிளையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி கிரிஜா (வயது 36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்த போது இறந்து விட்டார். அதை தொடர்ந்து கிரிஜா, மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் அவர், சுவாமியார் மடத்தில் உள்ள ஒரு துணி தைக்கும் கடையில் வேலை செய்து வந்தார்.

கிரிஜாவின் கணவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜாண் ரோஸ் (29) என்பவர் கிரிஜாவுக்கு உதவியாக இருந்தார். இருவரும் நெருங்கி பழக தொடங்கினர். நாளடைவில் இருவருக்கும் இடையேயான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து ஜாண்ரோஸ், கிரிஜாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு கிரிஜா சம்மதிக்கவில்லை.

மேலும், தனக்கு 2 மகள்கள் இருப்பதால், அவர்களின் நலன் கருதி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆனாலும் ஜாண்ரோஸ் திருமணம் செய்வதில் முழு ஈடுபாட்டுடன் இருந்தார்.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிரிஜாவை ஜாண்ரோஸ் தொடர்ந்து வற்புறுத்தினார். ஆனால் கிரிஜா மறுத்தார் இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி கிரிஜா, திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜாண்ரோஸை அழைத்து பேசி அனுப்பினர். அதன்பிறகும் இருவருக்கும் இடையே அடிக்கடி திருமணம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

தொடர்ந்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து வரும் கிரிஜாவை தீர்த்துக்கட்ட ஜாண் ரோஸ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஜாண்ரோஸ், கிரிஜாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு மகள்களுடன் பேசிக் கொண்டிருந்த கிரிஜாவிடம் தன்னை திருமணம் செய்யும்படி கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த ஜாண்ரோஸ், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கிரிஜாவின் முகத்தில் ஊற்றினார். இதில் கிரிஜாவின் முகம் வெந்தது. வலி தாங்க முடியாமல் கிரிஜா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ஜாண்ரோஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். முகம் வெந்து துடித்துக் கொண்டிருந்த கிரிஜாவை ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவட்டார் போலீசார் ஜாண்ரோஸை தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த ஜாண்ரோஸ், தென்னைக்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண்ரோஸ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணத்துக்கு மறுத்த விதவை மீது ‘ஆசிட்‘ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story