சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா தொடங்கியது - கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு


சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா தொடங்கியது - கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 11:30 PM GMT (Updated: 18 Jan 2019 11:14 PM GMT)

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்தாமரைகுளம்,

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவில் தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் கொடியை ஏற்றினார். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது. 25-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது. 28-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


Next Story