ஷோபாவை மட்டும் மனதில் நினைத்து கொண்டால் எடியூரப்பா இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் - மந்திரி எச்.டி.ரேவண்ணா கிண்டல்


ஷோபாவை மட்டும் மனதில் நினைத்து கொண்டால் எடியூரப்பா இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் - மந்திரி எச்.டி.ரேவண்ணா கிண்டல்
x
தினத்தந்தி 18 Jan 2019 11:20 PM GMT (Updated: 18 Jan 2019 11:20 PM GMT)

ஆட்சியை கவிழ்க்கும் நினைப்பை கைவிட்டு விட்டு ஷோபாவை மட்டும் மனதில் நினைத்து கொண்டால் எடியூரப்பா இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கிண்டலாக கூறினார்.

ஹாசன், 

ஹாசன் மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.டி.ரேவண்ணா கலந்து கொண்டார். முதலாவதாக அவர் ஹாசன் டவுனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி. கல்லூரியை திறந்து வைத்தார். பின்னர் அவர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டார். மேலும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அதையடுத்து அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், சரியாக பணி செய்யாத அதிகாரிகளை கண்டித்தார். மேலும் அதிகாரிகள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரிக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் பணியில் அலட்சியம் காட்டக்கூடாது என்று கலெக்டர் ரோகிணி சிந்தூரியையும், மந்திரி எச்.டி.ரேவண்ணா கடிந்து கொண்டார்.

அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடந்து வரும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது. எப்படியாவது ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்று நினைக்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது. எடியூரப்பாவுக்கு தற்போது 75 வயது ஆகிறது. அவர், ஆட்சியை கவிழ்க்கும் நினைப்பை விட்டுவிட்டு, ஷோபாவை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் இன்னும் சில ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வார்.

கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் இந்த கல்வியாண்டிற்குள் தலா 4 ஆங்கில வழி கல்வி பள்ளிகள் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story