பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி, நொய்யலில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி, நொய்யலில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 19 Jan 2019 12:09 AM GMT (Updated: 19 Jan 2019 12:09 AM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி, நொய்யலில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தரகம்பட்டி,

தரகம்பட்டியில் தமிழர் பண்பாட்டு பேரவை மற்றும் பொதுமக்கள் இணைந்து விளையாட்டு போட்டிகள் நடத்தினர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று, தரகம்பட்டி தமிழர் பண்பாட்டு பேரவை சார்பில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பி.டி.ஓ. மனோகரன் போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஊர்கவுண்டர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஊர் நாட்டாண்மை பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் ராசு, பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் கைலாசம், அ.தி.மு.க. துணைச்செயலாளர் பிரபா கரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல நொய்யல் அருகே மரவாபாளையத்தில் தமிழன் மன்றம் சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதையொட்டி நொய்யல் குறுக்குச்சாலையில் விளையாட்டுச்சுடர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.சி. சேம்பர் சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குணசேகரன் கலந்து கொண்டு விளையாட்டு சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். மரவாபாளையம் தமிழன்மன்ற பொன்விழா திடலில் கணேசன் சுடரைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியை ஊர் கொத்துக்காரர் கணேசன் தொடங்கி வைத்தார்.

இதில் மரவாபாளையம் பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினர். பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடை பெற்றது. பின்னர் பெண்களின் கும்மி மற்றும் கோலாட்டம் நடைபெற்றது. மேலும் காவேரி கரைவிழா மற்றும் தமிழன் மன்றத்தாரின் கலாசார உணவுத் திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பால்ராஜ் தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் ஊர்கவுண்டர்கள் கணேசன், முருகேசன், தமிழன் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், கரப்பாளையம், கந்தம்பாளையம், அண்ணாநகர், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழாவை முன்னி்ட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கரூர் அருகே உள்ள ரெங்க நாயகிபுரத்தில் அண்ணா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.


Next Story