கட்சி நிர்வாகிகளுக்கு ‘ஸ்மார்ட்’ செல்போன் வழங்கி திருச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது அ.தி.மு.க.


கட்சி நிர்வாகிகளுக்கு ‘ஸ்மார்ட்’ செல்போன் வழங்கி திருச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது அ.தி.மு.க.
x
தினத்தந்தி 19 Jan 2019 12:18 AM GMT (Updated: 19 Jan 2019 12:18 AM GMT)

திருச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு ‘ஸ்மார்ட்’ செல்போன் வழங்கி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை அ.தி.மு.க. தொடங்கி உள்ளது.

திருச்சி,

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை திரு.வி.க. திடலில் நேற்று அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் 110 பேருக்கு ‘ஸ்மார்ட்’ செல்போன்களை மாநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் எம்.பி. வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்த தேர்தலை சவாலாக ஏற்று எதிர்கொள்ள வேண்டும். தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சமூக ஊடகங்களில் விளக்கி பிரசாரம் செய்வதற்காக தான் நிர்வாகிகள் 110 பேருக்கு ‘ஸ்மார்ட்’ செல்போன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம் தான். அடுத்த கட்டமாக பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஸ்மார்ட் போன் வழங்கப்படும்.

திருச்சி விமான நிலைய விரிவாக்கம், அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ இடங்களை கேட்டு நாம் போராடி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் அரசு என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலையில் தான் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு திருச்சிக்கு துரோகம் செய்து வருகிறது. திருச்சியை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய ராணுவ மந்திரியாக இருந்தாலும் நமக்கு உதவி செய்யவில்லை. இதனால் திருச்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராவணன், மாவட்ட பால்வள தலைவர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ஜோதி, ஜாக்குலின், தலைமை கழக பேச்சாளர் மில்லர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார் கள்.

Next Story