பல்லடத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர் சங்கங்கள் சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்,
சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பல்லடம் தாலுகா செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் துரைசாமி, விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், சி.ஐ.டி.யு, விசைத்தறி சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பொது வினியோகத் திட்டத்தை விரிவுபடுத்தவும். அத்தியாவசிய பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை தடுத்து நிறுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும், விலைபொருட்களுக்கு சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விலையை தீர்மானிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.