உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கியதால் விவசாயிகள் மீண்டும் முற்றுகை –பரபரப்பு


உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கியதால் விவசாயிகள் மீண்டும் முற்றுகை –பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 7:28 PM GMT)

கிணத்துக்கடவு அருகே உள்ள பெரும்பதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கியதால் மீண்டும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு,

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் திருப்பூர், உடுமலை, சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வழியாக கேரளாவுக்கு உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைத்து, 320 கிலோ வாட்திறன் கொண்ட மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இற்காக கிணத்துக்கடவு தாலுகாவில் உள்ள காட்டம்பட்டி, பெரியகளந்தை, ஆண்டிபாளையம், குருநல்லி பாளையம், செட்டியக்காபாளையம், கோடங்கிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தாபுரம், சூலக்கல், சொக்கனூர் ஆகிய கிராமங்கள் வழியாக 75 உயர்மின் கோபுரங்களும், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள பெரும்பதி, புரவிபாளையம் பகுதிகளில் 16 மின்கோபுரங்களும் அமைக்கப்படுகிறது. இதற்கான அளவீடு பணிகள் நடந்து வருகிறது.

இதற்கான பணிகளில் பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில் பொள்ளாச்சி அருகே உள்ள பெரும்பதி பகுதியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள பால்ராஜ் என்கிற விவசாயிக்கு சொந்தமான விளை நிலத்தில் மின்கோபுர பணிகள் அமைக்க தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றன. இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, செயலாளர்சண்முகம் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர். இதனைதொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் பெரும்பதி பகுதியில் மாணிக்கம் என்பவரது தோட்டத்தில் அனுமதியின்றி பணியாளர்கள் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக கான்கிரீட் அமைக்க கம்பி கட்டும்பணியை தொடங்கினர். இதனை அறிந்த அந்த பகுதி விவசாயிகள் அங்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு, உயர்மின்கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலார்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பணியில் ஈடுபட்டவர்களிடம், இங்கு மின்கோபுரம் அமைக்க தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் பணிகளை தொடங்க வேண்டாம் என்று கூறினார். இதனை தொடர்ந்து அவர்கள் பணிகளை நிறுத்தி சென்றனர். இதனை தொடர்ந்து விவசாயிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது பெரும்பதியில் திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஒரே ஒருபகுதியில் மட்டும் உயர்மின்கோபுரம் அமைக்கும்பணி விவசாயி அனுமதியுடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story