நாட்டுப்புற கலைஞர்களின் வீதி விருது விழா லயோலா கல்லூரியில் தொடங்கியது


நாட்டுப்புற கலைஞர்களின் வீதி விருது விழா லயோலா கல்லூரியில் தொடங்கியது
x
தினத்தந்தி 19 Jan 2019 10:30 PM GMT (Updated: 19 Jan 2019 8:24 PM GMT)

நாட்டுப்புற கலைஞர்களின் கருத்துரிமைகளை நிலைநாட்ட 6-ம் ஆண்டு வீதி விருது விழா சென்னை லயோலா கல்லூரியில் நேற்று தொடங்கியது.

சென்னை,

லயோலா மாணவர் அரவணைப்பு மையம், லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து நாட்டுப்புற கலைஞர்களின் கருத்துரிமைகளை நிலைநாட்ட 6-ம் ஆண்டு வீதி விருது விழா சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவில், லயோலா கல்லூரி அதிபர் ஜெயபதி பிரான்சிஸ், செயலர் செல்வநாயகம், முதல்வர் ஆண்ட்ரூ, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், திரைப்பட பாடகி சின்னப்பொண்ணு, மாற்று ஊடக மையம் மாநில செயலாளர் சத்யசீலன், பேராசிரியர்கள் காளஸ்வரன், அமிர்த லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசும்போது, ‘ஒருவர் அறிவாளியாக இருக்கலாம். அவருடைய அறிவும், ஆற்றலும் மண்ணை நேசிக்கவில்லை என்றால், அவர் அடையாளமற்று போய்விடுவார். மகத்தான அடையாளமாக இருக்கும் தமிழ்மொழி எங்கே இருக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆங்கில மொழியை கற்றுக்கொள்வோம். ஆனால் தமிழ் மொழி அழிவில் ஆங்கிலம் வளரும் என்றால் அது தேவையில்லை. நம்முடைய மொழி, மரபுகள், கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியை தொடர்ந்து செய்துவருகிறோம். பாப் இசை பாமர இசைக்கு ஈடாகாது. நம்முடைய மண்ணின் கலைகளை அங்கீகரிப்போம். பாதுகாப்போம்’ என்றார்.

தொடக்க விழா முடிந்ததும், காணாமல் போன மரபு கலைகளை போற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மரபுவழி கோலாட்டம், காளிவேஷம் ஆட்டம் என பல்வேறு மரபு கலைகளை கலைஞர்கள் நிகழ்த்தி காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நக்கீரன் கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பிற்பகலில் கருத்துரிமை போராளிகள் அரங்கம், சொல்லதிரும் கருத்தரங்கம், கதைகள் சொல்லும் கருத்தரங்கம், திரை தரும் கருத்துரிமை, நாடகம் போடும் கருத்துரிமை என பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதில் ஏராளமான கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதுகுறித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த லயோலா கல்லூரியின் கலை, இலக்கிய பிரிவு பேராசிரியர் காளஸ்வரன், தமிழ்த்துறை பேராசிரியர் அமிர்த லெனின் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாட்டுப்புற கலைஞர்களின் கருத்துரிமைகள் நிலைநாட்டுவதற்கு இந்த வீதி விருது விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தமிழகத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 427 நாட்டுப்புற கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்றனர்.

Next Story