ஆஸ்பத்திரி வார்டில் பெண்ணிடம் ரூ.45 ஆயிரம் திருடிய தம்பதி கைது


ஆஸ்பத்திரி வார்டில் பெண்ணிடம் ரூ.45 ஆயிரம் திருடிய தம்பதி கைது
x
தினத்தந்தி 19 Jan 2019 10:36 PM GMT (Updated: 19 Jan 2019 10:36 PM GMT)

ஆஸ்பத்திரி வார்டில் பெண்ணின் கைப்பையில் இருந்து ரூ.45 ஆயிரம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் பிரவின். இவரது தாய் தென்மும்பையில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவர் தனது மனைவி சாஷியுடன் தாயை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். சாஷியின் கைப்பையில் ரூ.45 ஆயிரம் இருந்தது. பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி வார்டில் தாயிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சாஷியின் கைப்பையில் இருந்த அந்த பணம் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவினும், அவரது மனைவியும் இதுபற்றி ஆசாத் மைதான் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆஸ்பத்திரி வார்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பிரவின் தாயின் படுக்கை அருகே இருந்த பெண் உள்பட 2 பேர் சாஷியின் கைப்பையில் இருந்து நைசாக பணத்தை திருடிக் கொண்டு சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த ராஜ்நாராயன் மற்றும் அவரது மனைவி மிட்லி என்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடிய பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story