ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:30 PM GMT (Updated: 20 Jan 2019 7:03 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான கடந்த 15-ந் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம்(தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து, காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, விளக்கு மற்றும் சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திரு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிறைவு நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.

வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 

Next Story